Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டெல்லி: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க வேண்டுமென்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் சவாலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் தான். தியேட்டர்களுக்கு சென்று மக்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த காலம் போய் திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாகி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களால் நல்ல படங்கள் கூட நஷ்டம் அடைகின்றன.
இந்தப் பிரச்னைகளில் இருந்து தயாரிப்பாளர்கள், படக்குழு தப்பிக்க பல முயற்சிகளை எடுத்தாலும் அது பலனளிக்காமல் படங்கள் இணையதளங்களில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தங்களது திரைப்படங்களை, தொலைக்காட்சி தொடர்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதால் பெரும் இழப்பு ஏற்படுவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் பதிவு செய்யபட்டுள்ள டொமைன்களை முடக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்பு துறை, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் அத்தகைய இணையதளங்களை முடக்க முடியுமா என கேள்வி கேட்டு இணைய சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.